திருவாரூர், மார்ச் 6: பருத்திக்கான காப்பீடு தேதியை நீடிப்பதோடு, காப்பீடு தொகையில் பாதியை அரசு ஏற்க வேண்டும் என்று திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து மகேசன் தலைமை வகித்தார். செயலாளர் தாஜூதீன் முன்னிலை வகித்தார். இதில் மாநில தலைவர் ராஜகோபாலன், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்ட தீர்மானங்களை விளக்கி பேசினர். கூட்டத்தில், சம்பா பயிருக்கான காப்பீட்டுத்தொகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க செய்வதோடு, வேளாண் கடனுதவியை சாதாரண விவசாயிகளுக்கு தர மறுத்து, மிரட்டல் விடுப்போர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருத்தி விவசாயிகளுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் காலத்தில் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையல்களில் கூடுதல் எடை வைத்து நெல் கொள்ளை, மூட்டைக்கு ரூ.40 வரை கமிஷன் பெறுவது ஆகியன ஊக்குவிக்கப்படுகிறதா என்பதை அரசு விளக்க வேண்டும். டிபிசி யில் லஞ்சம் பெறும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும். பருத்திக்கான காப்பீடு தேதியை நீடிப்பதோடு, காப்பீடு தொகையில் பாதியை அரசு ஏற்க வேண்டும்.
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ஆலைத்தொழில்கள் ஏற்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். அரசின் வேளாண் பட்ஜெட்டில் உள்ள ஒன்றிரண்டு திட்டங்களையாவது ஏட்டளவில் வைக்காமல் செயல்படுத்த வேண்டும். சம்பாவிற்கு அறிவித்த நிவாரணம் தொகையை அரசு உடனடியாக விடுவித்து காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி டீ பார்ட்டி ஆலோசனை நடத்தவதை தவிர்த்து உணர்வுபூர்வமான செயல் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். நெகிழி உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும்.
மஞ்சள்பை திட்டத்தை பரவலாக்க வேண்டும். காடு, கழனியெங்கும் பெருகியுள்ள கஞ்சா விற்பனையை தடைசெய்ய வேண்டும். மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்கும் உபாயங்களை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். கர்நாடக அரசின் அணைக்கட்டும் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post பருத்தி காப்பீடு தேதியை நீட்டிக்க வேண்டும் appeared first on Dinakaran.